திருமணம்
என்று தனக்கென்று பொருள் சேமித்து வைத்துக் கொள்ள உரிமை ஏற்பட்டதோ அதன் பிறகுதான் திருமணமுறையும் ஏற்பட்டிருக்க வேண்டும். பொருள் தேடிச் சேமித்து வைக்கும் உரிமை ஏற்பட்டபிறகுதான் வெளியே பொருள் தேடச் செல்லும் போது தான் சேமித்து வைத்துள்ள பொருளைப் பாதுகாக்கவும், தான் வந்த போது தனக்குச் சிரம்ப்பரிகாரம் செய்யவும் ஒரு ஆள் தேவையாயிருந்தது. எந்த ஆணும் மற்றொரு ஆணுக்கு இவ்விதமான உதவி செய்யமுன் வந்திருக்கமாட்டான். எனவை இவ் வேலைக்கு ஒரு பெண்ணைத்தான் நாட வேண்டியிருக்கிறது. முதலில், பெண் ஒருவனது ஒத்துக்குப் பாதுகாப்பாக அமைந்து பிறகு அவளே அவனுக்குச் சொத்துமானாள். பிறகு அந்தச் சொத்துக்கு வாரிசு தேட வேண்டிய அவசியமும் ஏற்பட்டது. வாரிசு தேட ஆரம்பித்த காலத்தில்தான் அவளைத் தனக்கே உரிமையாக்கிக் கொள்ளவும், அவளைத் தன்னையன்றி வேறு புருடனை நாடாமல் இருக்கும் படிச் செய்யவுமனா நிர்ப்பந்தம் ஏற்பட்டது. மனிதச் சுபாவம் இப்படித்தான் இருக்கும்; அதாவது, தான் தேடிய பொருளைத் தனது இறப்புக்குப் பிறகு அனுபவிக்கப்போகும் வாரிசு, தனக்கே பிறந்ததகா – தன் இரத்தத்திலிருந்து தோன்றியதாக இருக்க வேண்டும் என்று நினைப்பது இயற்கையின் பாற்பட்டதே ஆகும்.
கல்யாணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் கூடி இயற்கை இன்பத்தை நூகரவும், ஒருவரை ஒருவர் காதலித்து ஒருவருக்கொருவர் வாழ்க்கைப் போட்டியில் ஏற்படும் சிரமத்துக்கு இளைப்பாறவும், ஆயாசம் தீர்த்துக் கொள்ளவும், ஆணுக்கு ஒரு பெண்ணும், பெண்ணுக்கு ஒரு ஆணும் வேண்டியிருக்கிறது என்பதைப் பெரும்பாலோர் சிந்திப்பதே இல்லை.
திருமணத்தின் அடிப்படையே இதை நடத்திக் கொடுக்க யாரும் தேவையில்லை என்பதுதான். மண மக்கள் தாங்களாகவே முடித்துக் கொள்ள வேண்டிய காரியம். பிற்கால வாழ்க்கையை இருவரும் சிநேகிதர்களாய் இருந்து அன்புடனும், ஒத்துரிமையுடனும் ஒருவருக்கொருவர் பழகிக் கூட்டு வாழ்க்கை ஏற்படுத்திக் கொள்ளத் தொடங்கும் இந்தக் காரியம் மணமக்களுடைய சொந்தக் காரியம் என்பது எங்கள் கொள்கை. இதில் மற்றவர்களது பிரவேசமே இருக்கக் கூடாது என்பது எங்களுடைய அடுத்த கொள்கை.
மனிதன் ஒருவனே இருந்து காரியம் ஆற்றுவது என்பது இயலாத காரியம் ஆகும். ஆகவே வாழ்வுக்கு ஒரு துணை வேண்டியுள்ளது. அந்தத் துணையினைத் தேடிக் கொள்வதுதான் திருமணம். வெறும் துணை என்று மட்டும் வைத்தால் பலன் தராது. துணை என்றால் நட்பு முறையில் இருக்க வேண்டும். நண்பனுக்கு அடியவன் என்ற நிலையில் இருக்க வேண்டும். உண்மையான நட்புக்கு இருவரும் ஒன்றாக வேண்டும். பேதம் ஏற்படுமேயானால் ஒத்துப் போக ஒருவரை ஒருவர் முந்த வேண்டும். அப்போதுதான் உண்மையான நட்பு மலரும். அதுதான் உண்மையான துணைவர்களுக்கு இருக்க வேண்டும். துணைவர்கள் என்றால் சம உரிமை உடைய துணைவர்களாக இருக்க வேண்டும்.
நாங்கள் செய்து வைக்கும் திருமணத்தில் மணமகளும் மணமகனும் சம உரிமை உடையவர்கள். இருவரும் சினேகிதர் மாதிரி. இருவரிலும் உசர்வு தாழ்வு இல்லை. உதாரணமாக இரண்டு பேர்கள் சேர்ந்து பகுதி பகுதி முதல் போட்டு ஒரு வியாபாரத்தைத் தொடங்குகின்றார்கள். இந்த வியாபாரத்தில் இரு வருக்கும் எப்படிச் சம உரிமையும், இடமும், லாப நஷ்டத்தில் சமபங்கும் இருக்கின்றதோ அது போலத்தான் வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் செய்து கொண்ட மணமக்கள் இருவருக்கும் உள்ள உரிமை யாகும்.
ஒரு பெண்ணும் ஆணும் சேர்ந்து பழகி ஒருவரை யொருவர் அறிந்உத கொண்ட பிறகுதான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். ஆண்களோடு சாதாரணமாகப் பெண்களைப் பழகச் சொல்ல வேண்டும். யோக்கியனா? குடிகாரனா? கோபக்காரனா? பைத்தியக்காரனா? வேடக்காரனா? என்று பெண்ணுக்கு முன்னரே தெரிய வேண்டாமா? பழகினால் தானே தெரியும். திடீரென்று ஒருவரையொருவர் முடிச்சு போடலாமா? அன்பு, குணம், பழக்க வழக்கம் இவைகளை உணர்ந்து ஒருவருக்கொருவர் நண்பர்களாகப் பழகவேண்டும். உடல் சேர்க்கை வேண்டும் என்று நான் கூறவில்லை. இதுதான் நான் சொல்லும் காதல் – ஆசை – இஷ்டம்.
உண்மையாகவே ஒருவன் ஒருத்தியுடன் காதல் கொண்டு விட்டான் ஆனால் அவள் வேறு ஒருவனிடம் காதல் கொண்டு விட்டதாய்க் கருத நேர்ந்தால் – அது பொய்யாகவோ மெய்யாகவோ இருந்தாலும் – தன் மனத்துக்குச் சந்தேகப்படும்படி ஆகிவிட்டால் அப்போதுகூட காதல் மாறாமல் இருந்தால்தான் உண்மைக் காதலா? அல்லது தன் மனம் சந்தேக்ப்பட்டால் அதிருப்தி அடைந்தால் நீங்கிவிடக் கூடியது கற்றமான காதலா எனபதற்கு என்ன மறு மொழி பகர முடியும்? காதல் கொள்ளும்போது காதலர்கள் நிலைமை, மனப் பான்மை, பக்குவம், இலட்சியம் ஆகியவைகள் ஒரு மாதிரியாக இருக்கலாம். பிறகு கொஞ்சக் காலம் கழிந்த பின் இயற்கையாகவே பக்குவம், நிலைமை, இலட்சியம் மாறலாம். இந்த மாதிரிச் சந்தர்ப்பங்களிலும் காதலுக்காக ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துக் கொண்டு சதா அதிருப்தியில் துன்பத்தில் அழுந்த வேண்டியதுதானா என்று பார்த்தால் அப்போதும் காதலுக்கு வலுவில்லாத்தையும் அது பயன்படாததையும் காணலாம்.
காதல் என்பது ஆசை, காமம், நேசம், மோகம், நட்பு என்பவைகளைவிடச் சிறிது கூடச் சிறந்தது அல்ல… அதற்கு ஏதேதோ கற்பனைகளைக் கற்பித்து ஆண் – பெண்களுக்குள் புகுத்தி வட்டதால், ஆண் – பெண்களும் தாங்கள் உண்மையான காதலர்கள் என்று காட்டிக்கொள்ள வேண்டுமென்று கருதி எப்படிப் பக்திமான் என்றால் இப்படி எல்லாம் இருப்பான் என்று சொல்லப் பட்டதால் அனேகர் தங்களைப் பக்திமான்கள் என்று பிறர் சொல்ல வேண்டுமென்று கருதிப் பூச்சுப் பூசுவதும், பட்டை நாம்ம் போடுவதும், சதா கோவிலுக்குப் போவதும், பாட்டுகள் பாடி வழுவதும், வாயில் சிவ சிவ என்று சொல்லிக் கொண்டிருப்பதுமான காரியங்களைச் செய்தும் தங்களைப் பக்திமான்களாகக் காட்டிக் கொள்கின்றார்களோ – அதுபோலவும், எப்படிக் குழந்தைகள் தூங்குவதுபோல் வேசம் போட்டுக் கண்களை மூடிக் கொண்டிருந்தால் பெரியவர்கள் குழந்தைகளின் தூக்கத்தைப் பரிசோதிப்பதற்காகத் தூங்கினால் கால் ஆடுமே என்று சொன்னால் அந்தக் குழந்தை தன்னைத் தூங்குவதாக நினைத்துக் கொள்ள வேண்டுமென்று கருதிக் காலைச் சிறிது ஆட்டுமோ அது போலவும்; எப்படிப் பெண்கள் இப்படி, இப்படி இருப்பதுதான் கற்பு என்றால் பெண்கள் அதுபோலெல்லாம் நடப்பது போல் நடப்பதாய்க் காட்டித் தங்களைக் கற்புள்ளவர்கள் என்று காட்டிக் கொள்ளுகிறார்களோ அதுபோலவும், உண்மையான காதலர்களானால் இப்படியல்லவா இருப்பார்கள் என்று சொல்லிவிட்டால், அல்லது அதற்கு இலக்கணம் கற்பித்துவிட்டால், அது போலவே நடந்து காதலர்கள் என்பவர்களும் தங்கள் காதலைக் காட்டிக் கொள்ளுகின்றார்கள். இதற்காகவே அவர்கள் இல்லாத வேடத்தை யெல்லாம் போடுவார்கள். ஆகவே, ஆசையைவிட, அன்பைவிட, நட்பைவிடக் காதல் என்பதற்காக வேறு ஒன்றும் இல்லை.
திடீரென்று காதல் கொள்வது, பிறகு கஷ்டப்படுவது, கேட்டால் காதலுக்காக என்று சொல்வது; என்ன நியாயம்? இது பலமற்ற சபலத்தனம். காதலுக்காகத் துன்பத்தை அடைவது முட்டாள்தனம். காதலும் கடவுளும் ஒன்று என்று சொல்வது இதனால்தான். காதலும் கடவுளும் ஒன்று என்றால் – காதலும் பொய் கடவுளும் பொய் என்றதான் அர்த்தம்.
பதிவுத் திருமணத்தில் ரிஜிஸ்ட்ரார் முன்னிலையில் நாங்கள் சட்டப்படிக் கணவனும் மனைவியுமாக ஏற்று நடக்கச் சம்மதிக்கிறோம் என்ற மட்டும்தான் சொல்கிறார்கள். நாம் நடத்தும் திருமணத்தில் நாங்களிருவரும் ஒருவருக் கொருவர் துணைவர்களாக வாழ்க்கை ஒப்பந்தம் செய்து கொள்வதோடு ஒருவருக் கொருவர் எல்லாத் துறையிலும் இன்ப – துன்பங்களில் சமபங்கு அளித்துச் சமமாக ஒத்து வாழ உறுதி கூறுகின்றோம்’ என்று சொல்லும் முறையைக் கையாள்கிறோம். நம்முடையது சம உரிமைத் திருமணம் அல்லவா?
